ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கான மெயின் தேர்வில் இந்திய மொழி தாள் தேர்வு நடந்தது: சென்னையில் 2 மையங்களில் தீவிர கண்காணிப்பு

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வின் 4வது நாளான நேற்று இந்திய மொழித்தேர்வு நடந்தது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் 2 பள்ளிகளில் இந்த தேர்வு நடந்தது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய(2022ம் ஆண்டுக்கான) ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளில் 1011 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வை கடந்த ஜூன் 5ம் தேதி நடத்தியது. இத்தேர்வை சுமார் 5.5 லட்சம் பேர் எழுதினர். தொடர்ந்து ஜூன் 22ம் தேதி முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் 13,090 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் சுமார் 610 பேர் தேர்ச்சி பெற்றனர்.


இந்த நிலையில் சிவில் சர்வீஸ் பணிக்கான மெயின் தேர்வு கடந்த 16ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் காலையில் முதல் தாள் தேர்வு(கட்டுரை வடிவிலானது) நடந்தது. தொடர்ந்து 17ம் தேதி காலையில் 2ம் தாள் (பொது அறிவு 1), மதியம் மூன்றாம் தாள்(பொது அறிவு 2) தேர்வும், 18ம் தேதி காலையில் 4ம் தாள்(பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு(பொது அறிவு 4) தேர்வும் நடந்தது. இந்த நிலையில் 4வது நாளான நேற்று காலையில் இந்திய மொழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வும் நடந்தது. இதற்காக இந்தியா முழுவதும் 24 நகரங்களில் தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பக செம்மல் கே.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இந்த தேர்வு நடந்தது.

தேர்வு மையங்களுக்கு செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், தகவல் தொடர்பு உபகரணங்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு தான் தேர்வு தொடங்கியது. ஆனால், தேர்வு மையங்களுக்கு தேர்வு எழுதுபவர்கள் காலை 7 மணி முதலே வர தொடங்கினர். அங்கு அவர்கள் கடைசிக்கட்டமாக தேர்வுக்கு தயாராகும் வகையில் படித்து கொண்டிருந்தனர். தொடர்ந்து அவர்கள் தேர்வு கூடங்களுக்கு சென்றனர். அவர்களை போலீசார் மூலம் கடும் சோதனைக்கு பின்னரே தேர்வு கூடங்களுக்கு அனுமதித்தனர். தேர்வு நடந்த மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து 5வது நாளாக இன்று காலையில் விருப்பப்பாடம் முதல் தாள், மாலை விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது.

Comments