கிருஷ்ணகிரியில் போலீசாரை மிரட்டுவதைப் போலவும், கஞ்சா அடிப்பதைப் போலவும், சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்ட இளைஞர் - கைதுக்குப் பிறகு காவல் நிலையத்தில் உச்சகட்ட பயத்தில் வாக்குமூலம் அளித்த கஞ்சா வாலிபர்..







கிருஷ்ணகிரியில் போலீசாரை மிரட்டுவதைப் போலவும், கஞ்சா அடிப்பதைப் போலவும், சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது..... கைதுக்குப் பிறகு காவல் நிலையத்தில் உச்சகட்ட பயத்தில் வாக்குமூலம் அளித்த கஞ்சா வாலிபர்..


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர்க்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்துக்கும் கஞ்சா புழக்கம் சம்பந்தமாக சோதனை நடத்துமாறு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், இன்று கிருஷ்ணகிரி நகர காவல் துறையினர் நகர் பகுதியில் கஞ்சா தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் அதிகளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக நகர காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் பார்த்திபனுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பழைய பேட்டையில் கஞ்சா சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய பேட்டை பேருந்து நிலையம் அருகே கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த இளைஞரை நகர காவல் நிலைய பயிற்சி உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 


பின்னர் அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், அவன் பெயர் அசோக் என்றும், கிருஷ்ணகிரி பழையபேட்டை கொத்தப்பேட்டா காலனியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவன் மீது ஏற்கனவே மூன்று அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. மேற்கொண்டு அவனது செல்போனை ஆய்வு செய்த போலீசார், அவனுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்திருந்த ரீல்சை ஆய்வு செய்தனர். அப்போது அதில் கஞ்சா அடிப்பது போன்றும், கஞ்சா செடியின் அருகில் இருந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதும், மேலும் காவல்துறையினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ரீல்ஸ் செய்திருப்பதும் கண்டுபிடித்தனர்.


இதன் அடிப்படையில் அசோக் மீது வழக்கு பதிவு செய்த நகர போலீசார், அவனிடம் வீடியோ மூலம் வாக்குமூலம் பெற்றனர். அந்த வாக்கு மூலத்தில் இனி தான் கஞ்சா அடிக்க மாட்டேன் என்றும், அடிதடியில் ஈடுபட மாட்டேன், போலீசாரை தரக்குறைவாக பேசமாட்டேன், ஒழுக்கத்துடன் நடந்து கொள்வேன் என போலீசாரிடம் கதறியுள்ளான்.

Comments