மதுரை ”கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டத்தின்கீழ் மருத்துவ முகாம்

மதுரை மாவட்டம்
”கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டத்தின்கீழ் 
மருத்துவ முகாம்
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., 
அவர்கள் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியம், ஒத்தக்கடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (17.03.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக பொது சுகாதாரத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள், ”கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டத்தின்கீழ் மருத்துவ முகாமை துவக்கி வைத்து, 
12 முதல் 14 வயதிற்குட்பட்ட இளஞ்சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டார்கள். 
பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்ட பின்னர் அதனை குணப்படுத்துவதற்காக மட்டுமே மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் அனுகுகின்றனர். பொதுமக்களின் இந்த மனநிலையை மாற்றி நோய்கள் ஏற்படுவதற்கு முன்பாகவே தடுத்திட விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ”கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” என்ற திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின்கீழ், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அவர்கள் வசிக்கின்ற பகுதிகளிலேயே இலவச  மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கிடும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அந்தவகையில், இன்றைய தினம் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், ஒத்தக்கடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ”கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டத்தின்கீழ் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்கள். இம்முகாமில்,  பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், குடல் நோய் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், தோல் நோய் மருத்துவம், இருதய நோய் மருத்துவம், சிறுநீரகம் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், சித்த மருத்துவம், மனநல மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், இயன்முறை மருத்துவம், முதியோர் நல மருத்துவம் போன்றவற்றுக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு மருத்துவர்களால் நோயைக் கண்டறிந்து அதற்கான முதல் சிகிச்சைகளும் செய்யப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் இத்திட்டத்தின்கீழ், வட்டாரத்திற்கு தலா 3 முகாம்கள் வீதம் மொத்தம் 39 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு இதுவரை 28 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 22,257 நபர்கள் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். 29-வது முகாமாக ஒத்தக்கடை பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 37,18,050 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் 1,01,736 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 16.03.2022-அன்று தொடங்கி 12 முதல் 14 வயதிற்குட்பட்ட இளஞ்சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும்
பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, ஒத்தக்கடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 12 முதல் 14 வயதிற்குட்பட்ட இளஞ்சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார்கள்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கண்ணொளி திட்டத்தின்கீழ், 10 பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளையும், 3 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு அட்டைகளையும் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில்,   ஒத்தக்கடை ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன் ஊராட்சி மன்ற துணை தலைவர் தபாக் ரவி மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.எஸ்.செந்தில்குமார் அவர்கள், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.இரா.சுவாமிநாதன் அவர்கள், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) மரு.லதா அவர்கள்   வட்டார மருத்துவ அலுவலர் முகமது சுல்தான் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேதுராமன் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் சாலி தளபதி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கயிலைச்செல்வன் உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments