மீண்டும் பட்டாசு வெடி விபத்தில் 10 பேர் பலி சோகத்தில் தமிழகம்


அரியலூர்: கீழப்பழுவூர் அருகே வெற்றியூரில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரியலூர் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலை உரிமையாளரையும் அவரது மருமகனையும் கைது செய்ய தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


 தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பட்டாசு விற்பனையும் சூடுபிடித்துள்ளது. பட்டாசு ஆலைகளில் வெடி விபத்தும் அதிகரித்து வருகிறது.

 கடந்த சில மாதங்களாக சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் பட்டாசு குடோன்களிலும் வெடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. 

இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வாணவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 


அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் வானவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். சனிக்கிழமையன்று ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். 

கடை உரிமையாளர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. அந்த சோகம் மறைவதற்குள்ளாக அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.


 கீழப்பழூர் அடுத்த விரகாலூர் கிராமத்தில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. வழக்கம் போல் இன்றும் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது இன்று காலை 10 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் இருந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தம் அப்பகுதியில் பல கி.மீ. தூரத்திற்கு எதிரொலித்ததாகக் கூறப்படுகிறது. 

ஆலையில் சுமார் 15 தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியானது. மேலும் சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதால் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. பலரது உடல் பாகங்கள் 200 மீட்டர் தூரத்திற்கு சிதறி கிடக்கின்றன. 


படுகாயமடைந்தவர்கள் கவலைக்கிடமான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 மணி நேரம் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. பட்டாசு ஆலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 இருசக்கர வாகனங்கள் எரிந்து கருகிவிட்டன. 

கடந்த ஆண்டு விபத்து நிகழ்ந்த இதே ஆலையில் கடந்த ஆண்டும் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆலை உரிமையாளரையும் அவரது மருமகனையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Comments