புதுடெல்லி: ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில், 3 முக்கிய கேள்விகள் குறித்து முதலில் விசாரணை நடத்தப்படும்,’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த இடஒதுக்கீட்டை வழங்குவதற்காக அரசியலமைப்பின் 103வது சட்டம் திருத்தப்பட்டதில் 3 முக்கிய கேள்விகள் எழுந்துள்ளதாகவும், முதலில் அது பற்றி விரிவாக விவாதிக்கப்படும் என்று இந்த அமர்வு நேற்று அறிவித்தது. அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விசாரணை நடக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கொள்கைகளை மீறும் வகையில் இந்த சட்டத்தை திருத்தும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு இருக்கிறதா? தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிப்பதற்கு அரசுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கியதில் அரசியலமைப்பு சட்டம் மீறப்பட்டுள்ளதா? இந்த சட்ட திருத்தத்தினால் பிற்பட்டோர், தலித்துகள், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு பாதிக்கப்படுமா? ஆகிய 3 முக்கிய கேள்விகள் குறித்து விவாதம் நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment