இன்று( மே 28) நடந்த பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சி தலைவராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பா.ம.க., சிறப்பு பொதுக் குழு கூட்டம், சென்னை, திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில், இன்று நடந்தது. பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக, தற்போது இளைஞரணி தலைவராக இருக்கும் அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டார்
இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய ஜி.கே. மணி,இளம் வயதில் மத்திய அமைச்சராக சிறப்பாக பணியாற்றியவர் என புகழாரம் சூட்டினார்.
புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அன்புமணி, கட்சியின் நிறுவனரும், தந்தையுமான ராமதாசுக்கு பூங்கொத்து கொடுத்தார்.
அப்போது, ஆனந்த கண்ணீர் வடித்த ராமதாஸ், அன்புமணியை ஆரத்தழுவி தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
பா.ம.க., தலைவராக, 25 ஆண்டுகளாக இருக்கும் ஜி.கே.மணிக்கு, 24ம்தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அன்புமணி தலைவராக தேர்ந்தடுக்கப்பட இருப்பதாலேயே, மணிக்கு விடை கொடுக்கும் வகையில், பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதனால், வழக்கத்தை விட இந்த பொதுக் குழுவை, 'மெகா' விருந்துடன் அமர்க்களமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 'தமிழகம், புதுச்சேரியில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், அணிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்' என,ஜி.கே.மணி அழைப்பு விடுத்திருந்தார்.
Comments
Post a Comment