தள்ளுபடி பயனாளிகள் நாளை முதல் நகைகளை பெறலாம்

 


தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதால், நகர்ப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில், நகைக்கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகள், நாளை முதல் நகைகளை பெற்றுக் கொள்ளலாம்.
தமிழக அரசு, பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 5 சவரன் வரை வழங்கிய நகை கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.அதன் அடிப்படையில், 48 லட்சம் பேர் நகை கடன் வாங்கியதில், 13 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி கிடைத்துள்ளது.
ஆனால், 5 சவரனுக்கு உட்பட்டு நகை கடன் வைத்த, 22.52 லட்சம் பேரில், 10.18 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக, கூட்டுறவு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.இதுவரை, பயனாளிகளின் விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது, 'நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு என்னவானது' என, எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இல்லாத ஊரக பகுதிகளில், 5 சவரன் நகை கடன் தள்ளுபடி சான்றை வழங்கலாம்; நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில், தேர்தல் காரணமாக, அத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது' என்று, கூட்டுறவு துறை அறிவித்தது.கூட்டுறவு வங்கிதற்போது, தேர்தல் முடிந்ததால் நடத்தை விதிகளும் விலக்கப்பட்டன.

இதனால், நகர்ப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில், நாளை முதல், 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி பயனாளிகள், தங்களின் நகைகளை பெற்று கொள்ளலாம். இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தள்ளுபடி பயனாளிகளின் பட்டியல் கூட்டுறவு வங்கிகள், சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 'அந்த பட்டியலில் உள்ள நபர்களுக்கு மட்டும் நகைகளுடன், கடன் தள்ளுபடி சான்றும் வழங்கப்படும்' என்றார்.

Comments