பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.1 கோடி மதிப்பு ஆவணங்கள் 91 பவுன் நகைகள் பறிமுதல்; 22 மணி நேரம் அதிரடி சோதனை

 
நாகர்கோவில்:
 நாகர்கோவிலில் மகளிர் இன்ஸ்பெக்டர் வீட்டில் நடந்த அதிரடி சோதனையில் சுமார் ரூ.1 கோடிக்கான டெபாசிட் பத்திரங்கள், 91 பவுன் நகைகள் மற்றும் ரூ.7.34 லட்சம்  உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கண்மணி. குமரி மாவட்ட எஸ்.பி. தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றினார். எஸ்.பி.சி.ஐ.டி., கோட்டார் காவல் நிலையங்களில் எஸ்.ஐ.யாக, பணிபுரிந்துள்ளார். இவரது கணவர் சேவியர் பாண்டியன். குமரி மாவட்ட நீதிமன்றங்களின் உதவி குற்றவியல் இயக்குனராக பணியில் உள்ளார். தற்போது இவர்கள், நாகர்கோவில் பாலசுப்பிரமணிய வீதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். நேற்று காலை 6 மணியளவில், இவரது வீட்டுக்கு குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர்பால் தலைமையில் போலீசார் சென்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் சோதனை நடத்த வேண்டும் என்று கூறினர்.


அப்போது வீட்டில் இன்ஸ்பெக்டர் கண்மணி, அவரது கணவர் சேவியர் பாண்டியன் ஆகியோரும் இருந்தனர். இதையடுத்து வீட்டில் சோதனை தொடங்கியது. இதே சமயத்தில் கண்மணியின் நெருங்கிய தோழியான அமுதா வீடு, நாகர்கோவில் மீனாட்சிபுரம் கார்டனில் உள்ளது. இவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இந்த வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரமா தலைமையில் போலீசார் சோதனைநடத்தினர். இன்ஸ்பெக்டர் கண்மணி வீட்டில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை பல மணி நேரம் நீடித்தது. இந்த சோதனையில் வீட்டில் இருந்து ரூ.7 லட்சத்து 34 ஆயிரம் ரொக்கம், ரூ.91 லட்சத்துக்கான டெபாசிட் பத்திரங்கள், 91 பவுன் நகைகள், இது தவிர ரூ. 7 லட்சத்துக்கான சீட்டு போட்டதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சொத்து பத்திரங்களும் சிக்கி உள்ளன. நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை, இன்று அதிகாலை சுமார் 4 மணி வரை 22 மணி நேரம் நீடித்தது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பதிவு செய்தல், நகைகளை எடை போடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. பின்னர் நகைகளை இன்ஸ்பெக்டரிடமே ஒப்படைத்தனர்.

இவை அனைத்தும் ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன. இதே போல் கண்மணியின் ேதாழியான அமுதா வீட்டில், நடந்த சோதனையில் ரூ.23 லட்சத்து 95 ஆயிரத்துக்கு கடன் கொடுத்ததற்கான பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது இது தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், மொத்தம் 3 பிரிவுகளில் இன்ஸ்பெக்டர் கண்மணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது கணவரும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் வழக்கு பதிவு விபரங்கள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் கண்மணி சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இவரது தோழி வீட்டில் ரூ.23.95 லட்சம் வரை கடன் கொடுத்ததற்கான பத்திரங்கள் சிக்கின. யார், யாரிடம் பணம் கொடுக்கப்பட்டது. இந்த பணம் இன்ஸ்பெக்டர் கண்மணியின் பணம் தானா? அமுதா கடன் கொடுத்திருந்தால், அவருக்கு இந்த பணம் எப்படி வந்தது? என்பது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.

Comments