பொம்மிடி ரயில் நிலையத்தில் ரயில்வே மேலாளர் ஆய்வுபயணிகள் சங்கம் முக்கிய கோரிக்கைகள் முன்வைத்தது

பொம்மிடி ரயில் நிலையத்தில் ரயில்வே மேலாளர் ஆய்வு
பயணிகள் சங்கம் முக்கிய கோரிக்கைகள் முன்வைத்தது

பொம்மிடி:

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்வதற்காக தென்னக ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் திரு. பன்னா லால் தலைமையில், ரயில்வே கோட்ட அலுவலர்கள் குழுவுடன் பொம்மிடி ரயில் நிலையத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த நேரத்தில், பொம்மிடி ரயில்வே பயணிகள் நல சங்கம் மற்றும் தென்னக ரயில் பயணிகள் நல சங்கம் சார்பில் கோட்ட மேலாளரிடம் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது. குறிப்பாக பின்வரும் விரைவு ரயில்களுக்கு பொம்மிடி ரயில் நிலையத்தில் 

கோவை எக்ஸ்பிரஸ்
திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்
கொச்சுவேலி எக்ஸ்பிரஸ்
மங்களூர் எக்ஸ்பிரஸ்
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
உதய் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களுக்கு
நிறுத்தம் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கப்பட்டது:

எல்லா ரயில்களுக்கும் நிறுத்தம் வழங்க முடியாவிட்டாலும், *குறைந்தபட்சம் கோவை எக்ஸ்பிரஸ் உட்பட இரண்டு ரயில்களுக்காவது நிறுத்தம் அளிக்க வேண்டும்* என வேண்டுகோள் வைக்கப்பட்டது. 

 மேலும் வாரத்தில் ஐந்துநாட்கள் இயங்கிய தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டுள்ள *அரக்கோணம் – சேலம் மெமு ரயிலை மீண்டும் வாரத்தில் ஏழு நாட்களும் இயக்க வேண்டும்* என்றும், பயணிகள் வசதிக்காக பிளாட்பார்ம் எண் 2 மற்றும் 3-ல் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது. தற்போதுள்ள நடைமேடை 1-ல் உள்ள கழிவறை எப்போதும் திறந்திருக்கும் வகையில் வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், தற்போது சேலம் மார்க்கம் செல்லும் ரயில்கள் இரண்டாம் நடைமேடை வழியாக இயக்கப்படுகின்றன, அவை முதல் நடைமேடை வழியாக இயக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

 *கோரிக்கைகள் ஏற்பு / உடனடி அறிவிப்பு:* 

கோரிக்கைகளை கேட்ட கோட்ட மேலாளர் *நடைமேடை 2 மற்றும் 3-ல் கழிவறை கட்டும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும்* என்றும், *சேலம் மார்க்கம் செல்லும் ரயில்கள் குறிப்பாக பாசஞ்சர் ரயில்கள் நடைமேடை 1-ன் வழியாக இயக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு நேரில் உத்தரவிட்டார்

இந்த நிகழ்வில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் அறிவழகன், காமராஜ், ஆசாம்கான், ஜெபசிங், முனிரத்தினம், சங்கீதா, வெங்கடேசன், சிவகுமார், சிவாஜி மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தனசேகர் மற்றும் மூத்த நிர்வாகி சொக்கலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

Comments