மயிலாடுதுறை: திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் பரதநாட்டியம் மூலமாகவும், இசை, கவிதை, உரைநடை, பாட்டு மூலமாக 12 மணி நேரத்தில் வெளிப்படுத்தி உலக சாதனை முயற்சி மயிலாடுதுறையில் இன்று (ஆக., 07) மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொய்யாமொழியார் திருவள்ளுவரின் உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமையை கலைகளின் வாயிலாக உலகுக்கு உணர்த்தும் விதமாக, பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி இன்று காலை துவங்கியது. திருக்குறளின் 1330 குறட்பாக்களையும், இரண்டரை வயது முதல் 42 வயது வரையிலான பரதநாட்டிய கலைஞர்கள் ஒவ்வொரு குறளின் பொருளையும், தமிழ் எழுத்துகள் பதித்த ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிந்த பரத கலைஞர்கள் பரதநாட்டிய அசைவுகளின் வாயிலாக வெளிப்படுத்தி நடனமாடினர். இசை, கவிதை, உரைநடை, பாட்டு ஆகிய வடிவிலும், திருக்குறளை சுழற்சி முறையில் பயிற்சியாளர்கள் கூற, அதற்கு ஏற்ப முகபாவனை, பரதநாட்டிய முத்திரை அசைவுகளுடன் இந்த சாதனை முயற்சி நடைபெற்றது. இதில் சுழற்சி முறையில் 50 பரதநாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடினர். நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பில் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டது. மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி சார்பில் பரதநாட்டிய குரு உமாமகேஸ்வரி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து பரதநாட்டிய மாணவ, மாணவிகள் மற்றும் இசைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Comments
Post a Comment